×

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி அஸ்வினியுடன் கிருத்திகை விழா தொடங்கியது: அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஆடி அஸ்வினியுடன் கிருத்திகை விழா  கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தினர். ஆடி அஸ்வினியை முன்னிட்டு அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோயிலில் குவிந்தனர். அவர்கள் நீண்டவரிசையில் நின்று முருகரை வழிபட்டனர்.

 பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று ஆடி பரணி என்பதால் காலையில் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.  மேலும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து காவடி எடுத்து வந்து வழிபடுவர். வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

இதில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகின்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் புகார் அளிக்க எண்கள்  அறிவிப்பு
திருத்தணி சுப்பிரமணிய  சுவாமி கோயிலில்  நேற்று முதல்  வரும் 25ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை பெருவிழா நடை பெறுகிறது.  இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் புகார் தெரிவிக்க  ஏதுவாக, 7094400102, 7094400103 மற்றும் 7094400108 ஆகிய அலை பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கோயில் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் மக்கள்  நகருக்குள் வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால் ஆதார் கார்டை காண்பித்தால் நகருக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.



Tags : Kritya Festival ,Audi ,Asvini ,Tiritani Murugan Temple , Tiruthani Murugan Temple, Aadi Ashwini, Krittikai Festival,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...