×

வாலாஜாபாத் பேரூராட்சியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 2 பூங்காக்கள் சீரமைப்பு: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பூங்காக்களையும் எம்எல்ஏ சுந்தர் திறந்து வைத்தார். வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட தனலட்சுமி நகர், வல்லப்பாக்கம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூங்காக்கள் எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்டன. இதனை அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினரிடம் பூங்காவை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், 15வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் தனலட்சுமி நகர் பூங்காவிற்கு ரூ.13 லட்சம், வல்லப்பாக்கம் பூங்காவிற்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை அடுத்து பூங்கா முழுவதும் சுற்று சுவர், பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான சருக்கு மெத்தை, ஊஞ்சல், ராட்டினம், சேர், முதியவர்கள் நடைபயிற்சி பாதை உள்ளிட்டவைகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்  சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு பூங்காவினை திறந்து வைத்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது, பொதுமக்கள் கூறுகையில், ‘தனலட்சுமி நகர் பூங்காவிற்கு மின்விளக்கு பொருத்த வேண்டும். இதனை தொடர்ந்து வல்லப்பாக்கம் பூங்காவிற்கு போதிய விளையாட்டு உபகரணங்கள் இல்லை. கூடுதலாக விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும். மேலும், இந்த பூங்காவில் ஒரே ஒரு இருக்கை மட்டும் உள்ளது. உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து சுந்தர் எம்எல்ஏ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பூங்காவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, செயல் அலுவலர் பிரேமா, துணை தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், திமுக பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி தியாகராஜன் உட்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Wallajahabad ,Sundar ,MLA , Walajabad Municipality, 2 Parks Renovation, Sundar MLA,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...