×

வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏக்கள் தீவிர பிரசாரம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, வாக்குகள் சேகரித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்டமாக பாண்டிச்சேரி உள்பட தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளில் வரும் 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள், தலைவர்கள் அனல் பறக்கும் வகையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், கோவிந்தவாடி அகரம், தண்டலம், கொட்டவாக்கம், இலுப்பப்பட்டு, ஏனாத்தூர், வையாவூர், களியனூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் நேற்று திமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வத்துடன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது, கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் மாலைகள் அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வானவேடிக்கைகளுடன், கிராமிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் ஆங்காங்கே வரவேற்றனர்.

பிரசாரத்தின்போது, வரும் 19ம்தேதி நடைபெறும் தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வத்தை வெற்றிபெற செய்ய வேண்டும், 3வது முறையாக மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், நமது உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமில்லாமல், தமிழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கிடைக்காது. இதுபோன்ற, நிலையில் புதிய பிரதமரை நாம் உருவாக்கினால், தமிழகத்திற்கு தேவையான மத்திய அரசின் திட்டங்களை உரிமையாக கேட்டு பெறலாம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாளிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட்டு, தினம் ஊதியம் 300 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தப்படும், விவசாயிகளுக்கு பல சலுகைகள் வழங்கப்படும்.

மேலும், மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்கும், மகளிர்களுக்கான இலவச பஸ் வசதி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கிராமப்புற இளைஞர்களுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கிப்பேசி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் செல்வத்துக்கு, உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெற செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பிரசாரத்தின்போது, ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜலஷ்மி குஜராஜ், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏக்கள் தீவிர பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Walajabad North Union ,Wallajahabad ,Uttaramerur ,MLA ,Sundar ,Kanchipuram ,Ehilarasan ,Selvam ,Wallajabad North Union ,Tamil Nadu ,Pondicherry ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி