சென்னை: வியாசர்பாடி பி-கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி (26). இவர்மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் 12க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த வருடம் அக்டோபர் மாதம் மணிமாறன் என்பவரை வெட்டிய வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த விக்கியை, நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.
*கஞ்சா வியாபாரி கைது
சென்னை: அண்ணாநகர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி புளியந்தோப்பு பட்டாளம் பகுதியில் ராஜேஷ் (36) என்பவரை 3 கிலோ கஞ்சாவுடன் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேஷின் நண்பரான பெரம்பூர் நீளம் தோட்டம் 1வது தெருவை சேர்ந்த சாந்தமூர்த்தியை (52) நேற்று அதிகாலை 4 மணிக்கு புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.
*பிரியாணி கடையில் தகராறு
சென்னை: புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலையில் உள்ள இரவு நேர பிரியாணி கடைக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு கத்தியுடன் வந்த 2 பேர் தகராறில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று, அந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு வ.உ.சி நகரை சேர்ந்த சூர்யா (27), சந்தோஷ் (22) என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
*மெக்கானிக் மீது தாக்குதல்
சென்னை: வியாசர்பாடி மாணிக்க விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் விக்னேஷ் (21), நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த 3 பேர், மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். விக்னேஷ் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் விக்னேஷ் தலையில் ஓங்கி அடித்துவிட்டு தப்பினர். இதில் விக்னேஷ் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
*கடைக்காரருக்கு வெட்டு
சென்னை: கொடுங்கையூர் சின்னாண்டி மடம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செல்வம் (27), கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெரு எதிரே பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த 2 பேர், மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளனர். செல்வம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள், கத்தியால் செல்வத்தின் தலையில் வெட்டிவிட்டு தப்பினர். இதில் செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரணையில், கொடுங்கையூர் சேலைவாயல் தென்றல் நகர் 4வது தெருவை சேர்ந்த கருணாகரன் (36), அவரது தம்பி கார்த்திக் (34) ஆகியோரை கைது செய்தனர்.