×

2083 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா அதிமுகவுக்கு வரலாறு கிடையாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுகவுக்கு வரலாறு கிடையாது என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்., கண்டிகை கிராமத்தில் கலைஞர் திடலில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 99 என்ற தலைப்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சயில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொற்கிழிகள் வழங்கி பேசியதாவது: மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவை மாநாடு போல மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கிறார் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர். கடந்த மூன்று மாத காலமாக ஆறு மாவட்டங்களில் விழா நடத்தப்பட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போது வழியெங்கிலும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். நமது முதல்வரின் உடல் நலனை குறித்து என்னிடம் கேட்டறிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வருக்கு உங்கள் அன்பு உள்ளவரை எதுவும் ஆகாது. அவர் விரைவில் பூரண குணம் அடைந்து தமிழக மக்களுக்கு பணியாற்றுவார். பல்வேறு இடங்களில் கழக ஆட்சியில் நல்லது நடக்கிறது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் என்னிடம் பல்வேறு மனுக்கள் அளித்துள்ளனர்.

இதை, முதல்வரிடம் நான் கொண்டு சேர்த்து அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது கட்சியில் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என பல்வேறு அணிகள் தனித்தனியாக இயங்கினாலும் நாம் அனைவரும் ஒரே அணி. தந்தை பெரியார் அணி, பேரறிஞர் அண்ணா அணி, கலைஞரின் அணி, நம்முடைய தலைவரின் அணி என அப்படித்தான் நமது பயணம் இருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நமது தலைவரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட செயலாளர்களிடம் நிதி உதவி கேட்டு பெற்று வருகிறோம்.  பெறப்படும் நிதிகள் அனைத்தும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

வரவு வைக்கப்பட்டுள்ள நிதிக்கு, வங்கி மூலம் வழங்கப்படும் வட்டியினை ஏழை மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவசரத் தேவைக்காக வழங்கப்பட உள்ளது. எனவே எந்த ஒரு உதவி தேவை என்றாலும் அதனை மனுவாக அளியுங்கள். அதனை பரிசிலனை செய்து அவர்களுக்கான உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தயவு செய்து என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்.  சின்னவன் என்று அழையுங்கள் அது போதும். 2019 நாடாளுமன்ற தேர்தல், அதன்பின் சட்டமன்றத் தேர்தல், அதன் பின் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியினை தமிழக மக்கள் நமது தலைவருக்கு வழங்கியுள்ளனர்.

இந்த வெற்றிக்கு ஆணிவேராக இருந்தது தமிழக மக்கள் நீங்கள் தான். நீங்கள் இல்லையென்றால் திமுகவே இல்லை. அனைவருக்கும் தெரிந்திருக்கும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பது. இனி அதிமுகவினரை நாம் திட்டப்போவதில்லை. ஏனென்றால் அக்கட்சிக்குள்ளேயே அடித்து கொள்கின்றனர். மேலும், அந்த இயக்கத்திற்கு வரலாறு ஏதும் கிடையாது. ஆனால், நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு. எனவே தமிழக மக்கள் நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை என பேசினார். இதனைத் தொடர்ந்து, 2083 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும் 422 ஏழை, எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம், 10 மற்றும் 12ம் வகுப்பில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 188 மாணவ, மாணவியர்களுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.    


Tags : 2083 Senior Pioneers Festival of Polaruchi ,Udhayanidhi Stalin , 2083 AIADMK has no history: Udayanidhi Stalin's speech
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின்...