சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி புதிதாக அறிவித்த பொறுப்பாளர்களையும் அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக துணை பொது செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதனும், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும் நியமிக்கப்படுவதாக அந்த கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஓஎஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின், ஆர்.காமராஜ், முன்னாள் சபாநாயகர் ஆர்.தனபால் உள்ளிட்ட 11பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பொன்னையன் பேசியதாக சர்ச்சை ஆடியோ வெளியான நிலையில் அமைப்பு செயலாளராக இருந்த அவர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலராக மாற்றப்பட்டார். ஆனால் பழனிசாமி அறிவித்த எந்த பொறுப்புகளும் செல்லாது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பழனிச்சாமி அறிவித்த பொறுப்பாளர் நியமனங்கள் அனைத்தும் அதிமுக விதிகளுக்கு புறம்பானது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடித்த அனுப்பியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அதிகாரமற்ற நபர்களால் இந்த நியமங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழவே செல்லாது என்பதால் இடைக்கால பொதுச்செயலாரை தேர்வு செய்ததும் செல்லாது என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஏற்கனவே அனுப்பியிருக்கும் மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு பொதுக்குழு தீர்மானங்களைம், பொறுப்பாளர்கள் நியமனங்களையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.