விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் நகைகளை வைத்து பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் மோசடி செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டிருக்கிறார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி, பாண்டிச்செல்வி, மகாபுரத்தை சேர்ந்த தங்கமாயா உள்ளிட்ட பெண்களிடம் அவர்களுடைய கணவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பழனிகுமார் என்ற சாமியார் கூறியிருக்கிறார். இதனால் பயந்துபோன அந்த பெண்களிடம் உங்கள் நகைகளை கொடுங்கள், பூஜை வைத்து தருகிறேன் என்று கூறி நகைகளை வாங்கியிருக்கிறார்.
மேலும் பெருமாள்பட்டி பகுதியில் பலரிடம் இப்படி 70 சவரன் நகைகளை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. நகைகளை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டபோது பழனிகுமார் மற்றும் அவருடைய மனைவி ரம்யா ஆகிய இருவர் தலைமறைவாகி இருக்கின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரின் பழனிகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அவருடைய மனைவி ரம்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.