புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்காக வரும் 21ம் தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டத்தில், அக்டோபர் 2ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாபெரும் பேரணி நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்பார் என கூறப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் பேரணி மட்டுமின்றி தற்போதைய அரசியல் நிலவரங்கள், வரும் 21ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.