சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ் முதுகலை பட்டப்படிப்பு 2022ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
தமிழ் மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை (M.A. Tamil), இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன.
2022-23ஆம் கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. விண்ணப்பங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வலைத்தளத்தில் (www.tamiluniversity.ac.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழியாக இப்பட்டப்படிப்பினை பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இந்த வகுப்புகளில் சேர்க்கைப் பெறும் மாணவர்களுள் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு தமிழக அரசால் கல்வி உதவித் தொகையாகத் திங்கள் தோறும் ரூ.2000/- வீதம் வழங்கப்படும்.
இருபாலருக்கெனத் தனித் தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 என்ற முகவரிக்கு அனுப்பப்பெறுதல் வேண்டும்.
விண்ணப்பம் (கட்செவி (whatsapp) எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் 5.8.2022 ஆகும். மேலும் கூடுதல் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.