ஓமலூர் ; ஓலூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இறைச்சி மாடுகளின் விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று கூடிய சந்தையில் சுமார் ₹7 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.ஓமலூர் அருகேயுள்ள பெருமாள் கோயில் மாட்டுச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய சந்தையாகும். நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கூடிய மாட்டு சந்தைக்கு, தமிழகம் முழுவதும் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இறைச்சி மாடுகள், காளைகள், கறவை மாடுகள், நாட்டு மாடுகள், எருமைகள் மற்றும் வளர்ப்பு கன்றுகள் என 3,500 கால்நடைகள் விற்பனை கொண்டு வரப்பட்டது. இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதை தொடர்ந்து, இறைச்சிக்கான வெட்டு மாடுகளை வாங்குவதற்காக கேரள வியாபரிகள் குவிந்தனர்.
மேலும், கேரளாவை சேர்ந்த வியாபாரிகள், வெட்டு மாடுகளை வாங்கி, உடனடியாக லாரிகளில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். சந்தையில் வழக்கமாக சுமார் ₹5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில், நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பு விற்பனையால் ₹7 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.