சென்னை: சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல அலுவலகத்தில் பேருந்துகளை நிறுத்தி செல்ல வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மணலி காமராஜர் சாலையில் உள்ள சிபிசிஎல் மற்றும் மீனாட்சி திரையரங்கம் பேருந்து நிறுத்தங்களுக்கிடையே உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம்-2 (மணலி) பேருந்து நிறுத்தம் கூடுதல் பேருந்து நிறுத்தமாக அறிவிக்கப்படுகிறது. எனவே, இனி அந்த வழியே இயக்கப்படும் அனைத்து சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளும் (தடம் எண் 44, 44சி, 56டி எக்ஸ்ன், 56டி, 56 டபிள்யு, 121 சி, 121 டி, 164) நேற்று முதல் இரு மார்க்கத்திலும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல உத்தரவிடப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் இதுகுறித்து, இந்த மார்க்கத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம் -2 (மணலி) பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்ல அறிவுறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர் மற்றும் போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் அனைவரும் சுற்றறிக்கையின்படி பேருந்துகள் நின்று செல்வதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.