×

பாலியல் பலாத்காரம் செய்து க.காதலியின் குழந்தை கொலை: காமக்கொடூரன் உள்பட 3 பேர் கைது

விராலிமலை: கள்ளக்காதலியின் மூன்றரை வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன். டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(24). இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை, மூன்றரை வயதில் பெண் குழந்தை. திவ்யா, செங்கல் சூளை ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திவ்யாவுக்கும், அவரைவிட இளையவரான கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஜெகன்(20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலானது. இதை அறிந்த கணவன் மனைவியை கண்டித்தார்.

இதனால் கணவனை பிரிந்த திவ்யா, கள்ளக்காதலன் ஜெகனுடன் கள்ளக்குறிச்சியில் கடந்த ஒரு வருடமாக செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து வேறு ஊருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்த அவர்கள், கடந்த வாரம் மதுரை அய்யூர் வந்து அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது ஜெகனின் நண்பரான பழனியப்பன், மதுரை வந்து அவர்களுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதில் 3 பேரும் ஒரே வீட்டில் தங்கி உள்ளனர். இந்நிலையில் ஜெகன், திவ்யா இருவரும் உல்லாசமாக இருப்பதை கண்டு பழனியப்பன், ரசித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் எல்லை மீறி திவ்யாவின் மூன்றரை வயது மகளுக்கும் அவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதற்கு உடந்தையாக ஜெகனும் இருந்ததோடு, அவரும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதை அறிந்த திவ்யா இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி மீண்டும் ஜெகன், சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். வெளியில் சென்று இருந்த திவ்யா, வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் சோர்வாக இருப்பதை கண்டு அவரை தனது கணவரிடம் விட்டு விட்டு வந்து விடலாம் என முடிவு செய்தார்.

இதற்காக திவ்யா, மகள் மற்றும் கள்ளக்காதலன் ஜெகன், அவரது நண்பர் பழனியப்பன் ஆகிய நான்கு பேரும் பைக்கில் மதுரையில் இருந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது விராலிமலை அருகே கொடும்பாளூர் வந்தபோது குழந்தை மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்ததால் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாகி குழந்தை பலியானது. இதனையடுத்து திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன், பழனியப்பன் ஆகிய 3 பேரும் பலியான குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுதொடர்பாக விராலிமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வந்தனர். திவ்யாவின் தம்பி ஆறுமுகத்திடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவரது செல்போன் மூலம் திவ்யாவை தொடர்பு கொண்ட போலீசார் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் போலீசார் திவ்யாவை பிடித்ததை தொடர்ந்து ஜெகன், பழனியப்பன் இருக்கும் இடத்தை திவ்யா கூறியுள்ளார். இதனையடுத்து இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து 3 பேரையும் விராலிமலை காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். இதையடுத்து போலீசார் ஜெகன், பழனியப்பன் ஆகியோர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த தாய் திவ்யாவும் கைது செய்யப்பட்டார்.

Tags : K. ,Kamakoduran , Rape and murder of Kathali's child: 3 people including Kamakhodooran arrested
× RELATED பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100...