ராய்ப்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது வயநாடு எம்பி அலுவலகம் தாக்குதல் சம்மந்தமாக பேசிய கருத்தை உதய்பூரில் நடந்த கொலையுடன் தொடர்புபடுத்தி பாஜ மூத்த தலைவர்கள் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதேபோல் ராகுல் வீடியோ குறித்து தவறான கருத்தை தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரோகித் ரஞ்சன் என்பவர் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் உள்பட பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் ராகுல் வீடியோ தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை நேற்று காலை உத்தரப் பிரதேசம், காசியாபாத் விரைந்தது. வீட்டில் இருந்த ரோகித் ரஞ்சனை கைது செய்வதற்கு சட்டீஸ்கர் போலீசார் முயன்றனர். இதேபோல் உத்தரப்பிரதேச போலீசாரும் அவரை கைது செய்வதற்கு முயற்சித்தனர். எனவே, இரு போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ரோகித்தை உ.பி. போலீசார் கைது செய்தனர்.