புதுடெல்லி: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த சவுண்ட் ரன்னிங் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பாருல் சவுதாரி புதிய தேசிய சாதனை படைத்தார்.இறுதிப் போட்டியில் 5வது இடத்தில் பின்தங்கியிருந்த சவுதாரி, கடைசி 2 சுற்றில் அபாரமாக ஓடி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். அவர் 8 நிமிடம், 57.19 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்தது புதிய தேசிய சாதனையாக அமைந்தது.
முன்னதாக, 2016ல் டெல்லியில் நடந்த போட்டியில் சூரியா லோகநாதன் (9:04.5) படைத்த சாதனையை பாருல் முறியடித்தார். மகளிர் 3000 மீட்டர் ஓட்டத்தில் 9 நிமிடத்துக்கு குறைவாக ஓடி இலக்கை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. அடுத்து இம்மாத இறுதியில் அமெரிக்காவின் ஓரேகான் நகரில் நடக்க உள்ள உலக சாம்பியன்ஷிப்பின் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் பிரிவில் பாருல் பங்கேற்க உள்ளார்.