நெல்லை: நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோயில் யானைக்கு காலணி தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் பெண் யானை காந்திமதிக்கு 52 வயதாகிறது. ஆனித்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்களின்போது சுவாமி வீதியு லாவின் போது யானை காந்திமதிக்கு பட்டம் கட்டி அலங்கரித்து அழை த்து வரப்படுவது வழக்கம். இந்நிலையில் யானையின் உடல் எடை அதிகரித்ததால் கோயில் வளாகத்தில் நடைப்பயிற்சி அளிக்கப்படுவதுடன் மூலிகை உணவும் வழங்கப்பட்டு வருகிறது. யானைக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. யானைக்கு உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது.
எனினும் முதுமை காரணமாக நடைவேகம் சற்று குறைந்துள்ளது. இதையடுத்து யானைக்கு காலணி அணிவித்து நடைபயிற்சி மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே யானை காந்திமதிக்கு சிவனடியார்கள் சார்பில், புதிதாக காலணிகள் தயாரித்து வழங்க முன்வந்தனர். இதற்காக கேரளாவில் உள்ள கோயில் யானைகளுக்கு காலணி தயாரித்து கொடுக்கும் நபர்களை அழைத்து வந்து காந்திமதி யானை கால்களின் அளவு எடுத்து தோலினால் காலணி தயாரித்து அதை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர். இதையடுத்து யானை காந்திமதிக்கு புதிதாக காலணி அணிவித்து நடைபயிற்சி அளிக்கும் பணியில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.