×

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்திற்கு அகதியாக வர முயற்சி செய்கின்றனர். கடந்த சில மாதங்களில் இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் இலங்கையர்கள் அகதிகளாக தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடலோர பகுதியில் வந்திறங்கியுள்ளனர். இவர்கள் மணடபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவில் தனுஷ்கோடி கடல் நான்காம் மணல் திட்டில் படகோட்டிகளால் இறக்கிவிடப்பட்ட சிறுவன் உட்பட 4 இலங்கையர்கள் பரிதவித்தனர். இன்று அதிகாலை மீன்பிடித்து திரும்பிய தனுஷ்கோடி மீனவர்கள், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நான்காம் மணல் திட்டில் இலங்கை அகதிகள் 4 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்த மரைன் போலீசார் நான்காம் மணல் திட்டில் இருக்கும் இலங்கை அகதிகளை மீட்பதற்காக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு வந்து மணல் திட்டில் தவிக்கும் இலங்கையர்களை காவல்படையினர் மீட்டனர். இவர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து மரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பின் இவர்கள் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Tags : Sri Lanka ,Dhushkodi , 4 refugees arrive in Dhanushkodi from Sri Lanka
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்