குமரி: தமிழ்நாட்டில் கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளில் 2வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள கடல் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் இன்று மாலை வரை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிவிரைவு விசைப்படகுகளில் நவீன பாதுகாப்பு கருவிகளுடன் சென்று, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதில் கூடங்குளம் கடல் பகுதியில் மாறுவேடம் இட்டு ஊடுருவிய ரெட் ஃபோர்ஸ் பார்ட்டியை சேர்ந்த 4 பேரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்தனர். அவர்களை விசாரணைக்காக கூடங்குளம் காவல்நிலையம் அழைத்து சென்றனர்.