×

முசிறி அருகே சுவராசியம் பட்டதாரியை லட்சாதிபதி ஆக்கிய கழுதை பண்ணை

முசிறி அருகே எம்.புதுபட்டி என்ற இடத்தில் கழுதை பண்ணை அமைத்து மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் பட்டதாரி படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்.

யாரும் கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என இனி வருங்காலத்தில் யாரையும் திட்ட முடியாது. ஏனென்றால் படித்த பட்டதாரி ஒருவர் முசிறி அருகே கழுதை பண்ணை அமைத்து அதன் மூலம் மாதந்தோறும் லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி வாலிபர்களுக்கு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காட்டி வருகிறார்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ஐந்திணை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையை நிர்வகித்து வருபவர் ராஜு. இவர் படித்த பட்டதாரி. இவர் தனது ஐந்திணை பண்ணையில் தற்போது 45 கழுதைகளை வைத்து பண்ணை அமைத்துள்ளார். கழுதை பண்ணையில், கழுதைப்பால் ஆன்லைன் மூலம் அமோக விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இங்கு கழுதை மூலம் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறார் பட்டதாரி ராஜி.

இதுகுறித்து கழுதை பண்ணை உரிமையாளரான ராஜுவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது. இந்தப் பண்ணையில் 45 கழுதைகள் வைத்து பராமரிக்கப்படுகிறது. இதில் 7 கழுதைகள் பால் கொடுக்கிறது. கழுதைப்பால் சித்த மருத்துவத்திற்கு முக்கிய அறுமருந்தாகிறது. அதேவேளை கழுதை பாலை குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கால்சியம் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கழுதைப்பால் வழங்கலாம். கழுதைப் பாலில் குறைந்த அளவே கொழுப்பு சத்து உள்ளது. 100 கிராம் பாலில் வெறும் 8.6 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு கழுதைப்பால் சிறந்த பானமாகும். கழுதைப் பாலில் விட்டமின் ஏ பி1, பி2, சி ஆகியவை உள்ளது.

பல சித்த மருத்துவர்கள் கழுதைப் பாலை வாங்கி செல்கின்றனர். கழுதைப்பால் எளிதில் கெட்டுப் போகாது. பாலை ஃப்ரீசரில் வைத்து மாதக்கணக்கில் பயன்படுத்த இயலும். கழுதை நாளொன்றுக்கு காலை 200 மில்லி மாலை 200 மில்லி அளவில் பால் கறக்கும் தன்மைகொண்டது. காலையில் மட்டும் கழுதையின் பாலை கறந்து கொண்டு மாலை அதன் குட்டிக்கு விட்டு விடுவேன். கழுதைப்பால் லிட்டர் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறேன்.

100 மில்லி 200 மில்லி அளவிலும் கழுதைப் பாலை வாங்கி செல்கின்றனர். எனது பண்ணையில் கழுதை பால் மூலம் சோப்பு தயார் செய்யப்படுகிறது. கழுதை முன்னால் சென்றால் கடிக்கும் பின்னால் சென்றால் உதைக்கும் என்ற வார்த்தை தவறு. கழுதை அமைதியாக அன்போடு பழகக் கூடியது. ஒருகாலத்தில் சலவைத் தொழிலாளர்கள் தங்களது பொதி மூட்டைகளை சுமந்து செல்ல பயன்படுத்தினர். மேலும் மலைவாழ் மக்கள் தங்கள் சுமைகளை சுமந்து செல்வதற்கு பயன்படுத்தி வந்த கழுதை தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

கழுதை இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒரு சில கழுதைகள் வாங்கி வளர்த்து வந்தேன். அதனைத் தொடர்ந்து கழுதையினால் கிடைக்கும் பலன்களை அறிந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் ஆகியவற்றுக்கு சென்று கழுதைகளை விலைக்கு வாங்கி வந்தேன். தற்போது என்னுடன் சேர்த்து 46 கழுதைகள் இந்த பண்ணையில் உள்ளது. நான் கழுதை மேய்ப்பதை சிலர் பார்த்து சிரித்து கிண்டல் செய்தவாறு செல்வார்கள்.

அவர்களுக்கு கழுதையினால் கிடைக்கும் பயன்கள் தெரிவதில்லை. என்னிடம் வளர்க்கப்படும் கழுதைகளிடம் இருந்து பால், லத்தி(சாணம்), உதிரும் முடி என அனைத்தும் பணமாகும். ஆன்லைன் மூலமும், நேரிலும் கழுதை பால் சிறப்பான முறையில் வியாபாரம் ஆகிறது. கழுதை லத்தி அதாவது சாணத்திலிருந்து சாம்பிராணி, கொசு விரட்டி ஆகியவை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. கழுதைப்பால் மூலம்பிஸ்கட், குளியல் சோப் ஆகியவையும் தயார் செய்யப்படுகிறது.

கழுதை பால் மூலம் தயாரிக்கப்படும் சோப்பு தோலில் ஏற்படும் அலர்ஜி பாதிப்பை போக்க வல்லது. மேலும் கழுதை கோமியமும் விற்பனை செய்யப்படுகிறது. கழுதையின் உடலிலிருந்து உதிரும் ரோமத்தை தாயத்தில் அடைத்து குழந்தைகளுக்கு கட்டி விடுவதால் பயந்த கோளாறு பாதிப்பு இருக்காது என கிராமப்புறங்களில் நம்பப்படுகிறது. இதற்காக கழுதை முடிகளை சிலர் வாங்கிச் செல்வதுண்டு.

என்னிடம் ஏழு கழுதைகள் தற்போது பால் கறக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மாதந்தோறும் 30 லிட்டர் கழுதை பால் விற்பனை செய்கிறேன். இதன் மூலம் எனக்கு கிடைக்கும் வருமானம் 90 ஆயிரம். கழுதை லத்தி குறைந்தபட்சம் 50 கிலோ விற்பனை செய்கிறேன். லத்தியிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். கழுதை கோமியம் விற்பனையில் இருந்து ரூபாய் ஐந்தாயிரம் கிடைக்கும். ஆக மொத்தம் என்னுடைய மாத வருவாய் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது. ஏழு கழுதைகள் மட்டுமே பால் கறக்கும் நிலையில் எனது வருவாய் இது. கூடுதலாக கழுதைகள் பால் கறந்தால் அதிக வருவாய் கிடைக்கும்.

அழிந்துவரும் விலங்கினமான கழுதை இனத்தை மீட்டு வாழ வைக்கும் முயற்சியில் இறங்கிய என்னை கழுதைகள் வாழ வைக்கிறது. இதுபோக நான் நான்கு பேருக்கு கழுதைகளை பராமரிப்பதற்காக வேலை கொடுத்துள்ளேன் என்று கூறினார்.என்னைப்பார் யோகம் வரும் என கடைகளிலும், வீடுகளிலும் கழுதைகளின் படத்தை மாட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் பட்டதாரியான ராஜு நிஜத்திலேயே கழுதை வளர்த்து பணம் சம்பாதிக்கும் யோக காரராக மாறியுள்ளதை கண்கூடாக காணமுடிகிறது.

வாலிபர்கள், வேலை இல்லாதோர் கழுதை பண்ணை அமைப்பதற்கு உதவுவதாகவும் ராஜி தெரிவிக்கிறார்.கழுதை பண்ணை அமைப்பதை விட அதில் கிடைக்கும் பொருட்களை சந்தைப்படுத்துதல் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே ராஜீவின் முதல் அட்வைஸ் ஆக உள்ளது.

Tags : Muzaffarnagar , Graduate earns over a lakh rupees a month by setting up a donkey farm at M. Pudupatti near Musiri
× RELATED ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு இன்றி...