நாக்பூர்: ‘எப்ஐஆரில் உள்ள தகவல்களின் உண்மை நிலையை செய்திகள் வெளியிடும் பத்திரிகைகள் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை,’ என்று நாக்பூர் உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வெளிவரும் ‘லோக்மத்’ என்ற மராத்தி பத்திரிகையில், கடந்த 2016ம் ஆண்டு ரவீந்திர குப்தா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு பற்றிய செய்தியை எப்ஐஆரின் அடிப்படையில் வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பு தெரிவித்த குப்தா குடும்பத்தினர், ‘இந்த செய்தி தவறானது.
பத்திரிகை வெளியீட்டாளர்கள் இந்த எப்ஐஆரின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் செய்தியை வெளியிட்டுள்ளனர்,’ என்று மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த கீழ் நீதிமன்றம், பத்திரிகை ஆசிரியர் மீது வழக்கு தொடர உத்தரவிட்டார். இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் பத்திரிகை ஆசிரியரும், வெளியீட்டாளரும் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி வினய் ஜோஷி, வழக்கை தள்ளுபடி செய்து, ‘எப்ஐஆரில் உள்ள விவரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிட வேண்டும் என்பது சரியல்ல,’ என்று தெரிவித்தார்.