×

சின்னமனூர் அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்-அதிகாரிகள் அதிரடி

சின்னமனூர் : சின்னமனூர் அருகே குளத்தில் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பேரூராட்சிகள் உள்ளன. இந்த இரண்டு பேரூராட்சி ஊர்களும் உத்தமபாளையம், உப்புக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து இருக்கின்றன. இந்த நெடுஞ்சாலையில் மார்க்கையன்கோட்டை அவுட்டோர் துவங்கி குச்சனூர் அவுட்டோர் வரை 41 ஏக்கர் அளவில் சுண்டக்காயன் குளம் உள்ளது.

இந்த குளத்தில் ஜூன் முதல் தேதியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுக்கு இரண்டு போகம் நெல் சாகுபடிக்காக பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகின்றது. இந்த குளத்தில் 13 ஏக்கர் அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். சிலர் தென்னை மரங்கள் வளர்த்து தோப்பாக மாற்றியுள்ளனர். வீடும் கட்டியுள்ளனர். இதனால் குளம் சுருங்கிவிட்டதால் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. விவசாயமும் பாதிக்கப்பட்டு வந்தது.எனவே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

இந்நிலையில் கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் நேற்று உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உட்கோட்ட பொறியாளர் கணேசமூர்த்தி, உதவி பொறியாளர் சுரேஷ்குமார், பணி ஆய்வாளர் மலைச்சாமி, மார்க்கையன்கோட்டை ஆர்ஐ காத்தமுத்து, விஏஓ இஸ்மாயில் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஜேசிபி இயந்திரம் கொண்டு சின்னமனூர் போலீசார் பாதுகாப்புடன் முதற்கட்டமாக 4 ஏக்கரில் ஆக்கிரமிப்பை அகற்றி குளத்துடன் இனணத்தனர். இதை தொடர்ந்து அருகில் பாசனநீர் கடக்கும் வாய்க்காலும் அமைக்கப்பட்டது.

இதற்கிடையில் ஆக்கிரப்பாளர்கள் மீதமுள்ள ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் என அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது அதிகாரிகள் கூறுகையில், மீதமுள்ள 9 ஏக்கரில் ஆக்கிரமித்தவர்கள் தூசி பட்டா வாங்கி உள்ளனர். அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளோம்.
ரத்து உத்தரவு வந்தவுடன் உடனடியாக 9 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : Chinnamanur , Cinnamanur: Authorities removed the encroachment on a pond near Cinnamanur. Because then the invaders were engaged in debate
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்