கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 10வது வார்டில் திமுகவை சேர்ந்தவர் விஜயகுமார் (64). இவர் 2வது முறையாகவும் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், சில மாதத்திலேயே உடல்நலக்குறைவால் வீட்டிலேயே பிசியோ தெரபி மூலம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அரசியல் கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். இவர், கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது, காலியாக உள்ள 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வருகிற 9ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, அந்த வார்டுக்கு திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து திமுக அவசர ஆலோசனை கூட்டம் வெங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள திருவேங்கட பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்றத் தலைவருமான எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், எம்.பி.செல்வம், வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தா.மோ.அன்பரசன் அமைச்சர் கூறுகையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக தலைமை ஓரிரு நாட்களில் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும் என்றார்.