வில்லியனூர் : புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பிஆர்டிசி பேருந்து நேற்று மாலை 4.45 மணியளவில் திருக்கனூர் பகுதியிலிருந்து மண்ணாடிப்பட்டு, வாதானூர், பி.எஸ்.பாளையம், மதகடிப்பட்டு, திருவாண்டார்கோவில் வழியாக புதுச்சேரி நோக்கி வந்தது. வில்லியனூர் அடுத்த அரியூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றியுள்ளனர். அப்போது மதகடிப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பேருந்தின் ஓட்டுனர் பாலமுருகன், நடத்துனர் அய்யனார் மற்றும் 3 பேர் பிஆர்டிசி பேருந்தை வழிமறித்து, இது எங்களுடைய டைம், இந்த நேரத்தில் நீங்கள் ஏன் பயணிகளை ஏற்றுகிறீர்கள், வண்டியை எடுங்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும், பிஆர்டிசி ஓட்டுனர் ராஜவேலு (38), நடத்துனர் வடமலை (40) ஆகியோருடன் தகராறு செய்துள்ளனர். ஆனால், பிஆர்டிசி ஓட்டுனரும், நடத்துனரும் பயணிகளை தொடர்ந்து ஏற்றியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், அய்யனார் மற்றும் சிலர் பிஆர்டிசி பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
பின்னர், பிஆர்டிசி பேருந்து ஓட்டுனர் ராஜவேலு தலையில் தடியால் அடித்துள்ளனர். தடுக்க வந்த நடத்துனர் வடமலையையும் தாக்கியுள்ளனர். இதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று பிறகு வில்லியனூர் காவல் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தனர். அதன்பேரில் வில்லியனூர் போலீசார், அரசு சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தனியார் பேருந்து ஓட்டுனர் பாலமுருகன், நடத்துனர் அய்யனார் ஆகியோரை கைது செய்தனர்.