சென்னை: கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை, கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 200 மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் காவேரி, கல்லூரி பேராசிரியர் சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கல்லூரியில் பி.காம் (பொது), பிபிஏ, பிசிஏ, பி.எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் முதலாமாண்டில் 220 மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். முதல் பருவத்தேர்வு பிப்ரவரி 2022ல் நடைபெற்றது. தற்போது 2ம் பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 2022-2023 கல்வி ஆண்டில் நான்கு பாடப்பிரிவுகளுடன் புதியதாக பி.ஏ. (சைவ சித்தாந்தம்) பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.