×

கனிமொழி எம்பிக்கு கொரோனா: சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்

சென்னை: திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சி பணி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். கனிமொழி எம்பி ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கவச உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார். இந்த நிலையில் கனிமொழிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Kanimozhi ,Chennai , Kanimozhi MP, Corona, Women's Team,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...