×

மழைநீர் தேங்குவதை தவிர்க்க ரூ.13 கோடியில் வீராங்கல் ஓடையை தூர்வாரி, சீரமைக்க நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

ஆலந்தூர்: நங்கநல்லூர்- ஆதம்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க வீராங்கல் ஓடையில் ரூ.13 கோடியில் சீரமைப்பு பணி நடைபெறும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 165 மற்றும் 167வது வார்டுக்கு உட்பட்ட 7 இடங்களில் 5 ரேஷன்கடை, பல்பொருள் அங்காடி, கோணி கிடங்கு கட்டிடங்கள் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று காலை நங்கநல்லூரில் நடந்தது. ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். மண்டல உதவி ஆணையர் பாஸ்கரன், மாமன்ற உறுப்பினர்கள் நாஞ்சில் பிரசாத், துர்காதேவி நடராஜன், தேவி ஏசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நங்கநல்லூர், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை போன்ற பகுதிகளில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பலர் வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுவதால், உடமைகளை இழந்து தவிக்கின்றனர். எனவே, மேற்கண்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க, ரூ.13 கோடியில் 3 கி.மீ தூரம் உள்ள வீராங்கால் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, இறுபுறத்திலும் கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. வரும் புதன் கிழமை இதற்கான பணிகள் தொடங்க உள்ளது,’’ என்றார். நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர் ஆர்ட்டின் ரோசாரியோ, ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், திமுக நிர்வாகிகள், கோல்ட் பிரகாஷ் ஜெயராம், மார்த்தாண்டன் எழிலரசு ஜெ.நடராஜன், கே.ஆர் ஜெகதீஸ்வரன் ஏசுதாஸ், வேலு ஆகியோர் பங்கேற்றனர்.


Tags : Veerangal stream ,Minister ,Thamo Anparasan , Measures to clear and rehabilitate Veerangal stream at a cost of Rs 13 crore to prevent rainwater stagnation: Minister Thamo Anparasan
× RELATED வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்