சென்னை: பொதுக்குழு, ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் கூறினார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பொதுக்குழு மற்றும் தீர்மானம், ஓபிஎஸ் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய பிறகு அவர் வெளியில் வந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்தும், பொதுக்குழு தீர்மானம் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்மகன் உசேன், அதிமுகவின் அனைத்து விஷயங்களிலும் தலைமை கழகம் முடிவு செய்யும். அதற்கு கட்டுப்படுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.