காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், தியாகி விஸ்வநாததாசின் 137வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் பங்கேற்று மலர் தூவி மரியாதை செய்தார்.மறைந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடக கலைஞருமான தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தியாகி விஸ்வநாததாஸ் 137வது பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமுதாய நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ சமுதாய நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் செயலாளர் ஜி.எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ஏழுமலை முன்னிலையில் வகித்தார். நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு தியாகி விஸ்வநாத தாசின் உருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவ சமுதாய நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் மாநில துணை தலைவர் ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் குமார், துணை தலைவர் கோவிந்தராஜ், மற்றும் நிர்வாகிகள் பச்சையப்பன், நித்யானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.