உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு விழா நடந்தது. உத்திரமேரூர் அடுத்த இளநகர் கிராமத்தில், தேசிய பால் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ரவிசங்கர், செயலாளர் சிவானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பால் குளிரூட்டும் நிலையத்தினை திறந்து வைத்து பார்வையிட்டனர். மேலும், பால் குளிரூட்டும் நிலையத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.இதில், மாவட்ட குழு உறுப்பினர் பத்மாபாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் ருத்ரகோட்டி, விவசாய அணி அமைப்பாளர் ஏழுமலை, பேரூராட்சி தலைவர் சசிகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.