சென்னை: கோயில்களில் 6 மாதத்திற்கு ஒருமுறை தீ தடுப்பு தணிக்கை நடத்த வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு: துறையின் ஆளுகைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(III)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து கோயில்களிலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை தீத்தடுப்பு தணிக்கை (Fire Audit) நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோயில் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தீத்தடுப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கான அறிக்கையினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து முதுநிலை கோயில்கள் ஆணையர் அலுவலகத்திற்கும். முதுநிலை அல்லாத கோயில்கள் மண்டல இணை ஆணையர்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளளப்படுகிறது. தங்கள் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து சட்டப்பிரிவு 46(III)ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட கோயில்களில் 6 மாதத்திற்கு ஒருமுறை தீ தடுப்பு தணிக்கை நடத்தப்படுவதை மண்டல இணை ஆணையர்கள் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.