புதுடெல்லி: அடுத்த மாதம் இறுதிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 4ஜி சேவையைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவை இன்றியமையாததாகி உள்ளது. கடந்த 2014ல் 10 கோடியாக இருந்த பிராண்ட்பேண்ட் சந்தாதரர்களின் எண்ணிக்கை தற்போது 80 கோடியாக அதிகரித்துள்ளது. கல்வித் துறையிலும் தற்போது இணையதளத்தின் சேவை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, 4ஜியை விட 10 மடங்கு வேகமான 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விடுவது தொடர்பாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமீபத்தில் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது.
இந்நிலையில், 5ஜி ஏலத்தை நடத்த ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன்படி, அடுத்த மாத இறுதிக்குள் ஏலம் நடத்தி முடிக்கப்படும். மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட உள்ளது. இது 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இது குறித்து அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் 5ஜி சேவைகளை வழங்குவதற்கான சேவை வழங்குநர்களுக்கு ஏலம் மூலம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். இது 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். முதன்முறையாக, ஏலதாரர்கள் முன்பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை 20 ஆண்டுகாலத்திற்கு தவணை முறையில் செலுத்தலாம். இது பணப்புழக்க தேவைகளை எளிதாக்கும். மேலும், இந்தத் துறையில் வணிகம் செய்வதற்கான செலவைக் குறைக்கும்’ என கூறப்பட்டுள்ளது.