×

காதலை ஏற்க மறுத்து வேறு ஒருவருடன் திருமணம் பெண்ணின் தந்தை அடித்து கொலை: உறவினர்கள் 3 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அருகே காதல் தகராறில் உருட்டு கட்டையால் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்(55). விவசாயி. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த உறவினரான கண்ணன் காதலித்தார். இந்த விவகாரம் ஜீவானந்தத்துக்கு தெரியவந்தது. ஏற்கனவே, கண்ணன் நடவடிக்கை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு திருமணம் செய்துகொடுக்க ஜீவானந்தம் மறுத்து வந்துள்ளார். பின்னர் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான யுவராஜ் என்பவருக்கு அவரது மகளை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தார். மேலும், திருமணத்துக்கு பிறகு யுவராஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மாமனார் வீடான காட்டூருக்கு அவ்வப்ேபாது வருவது வழக்கம். அப்போதெல்லாம் கண்ணனை ஒருதலையாக யுவராஜ் திட்டியுள்ளார். இதனால் எப்போதும் நம்மை திட்டுகிறாரே என்ற ஆதங்கம் கண்ணனுக்கு இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காட்டூருக்கு வந்த யுவராஜை வழிமறித்து, ‘எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் எதற்காக என்னிடம் அடிக்கடி தகராறு செய்கிறாய்’ என்று கண்ணன் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த ஜீவானந்தம் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு வந்து கண்ணனிடம் வாக்குவாதம் செய்தனர். இதையறிந்த கண்ணனின் அண்ணன் முத்து மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதனால் இருதரப்பினரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த முத்து மற்றும் உறவினர்கள் உருட்டுக்கட்டையால் ஜீவானந்தத்தை சரமாரியாக தாக்கினர். இதனால் அவரது தலையில் பலத்த காயத்துடன் அலறித்துடித்தார். உடனே அவரை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ஜீவானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்படி போலீசார் வழக்கு பதிந்து காட்டூரை சேர்ந்த முத்து(29), நித்தியானந்தம்(36), ராஜேஷ்குமார்(30) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Woman's father beaten to death for refusing love: 3 relatives arrested
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்