×

காயார் காவல் நிலையத்துக்கு கூடுதல் போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் திருப்போரூர், மானாம்பதி, காயார் ஆகிய 3 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் காயார் காவல் நிலையம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கும்போது ஒரு எஸ்ஐ, 2 எஸ்எஸ்ஐ, 7 காவலர்கள் நியமிக்கப்பட்டனர். 20 பணியிடங்கள் இருந்தாலும் 10 பேர் ஓரளவுக்கு காவல்நிலையத்தை பராமரித்து வந்தனர். தற்போது காயார் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் இந்த காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

பலரும் பணியிட மாற்றம் கேட்டு சென்றுவிட்டதால் இந்த காவல் நிலையத்தில் அண்மைக்காலம் வரை விஜயபாஸ்கர் என்ற ஒரே எஸ்ஐ மட்டும் இருந்தார். தற்போது அவரும் பதவி உயர்வு பயிற்சிக்காக சென்றுவிட்டார்.தற்போது சிங்காரவேலு என்ற ஒரே ஒரு எஸ்ஐ மற்றும் 2 போலீஸ் ஏட்டு மற்றும் 2 போலீசார் மட்டுமே உள்ளனர். இந்த காவல் நிலையத்தின் கீழ் 23 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமமும் நீண்ட தூரம் உள்ளதால் முக்கியமான குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது உடனே போலீசார் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் நிலுவையில் உள்ளது. முக்கிய புகார்கள் வந்தால் அவற்றை திருப்போரூரில் உள்ள இன்ஸ்பெக்டரிடம் சென்று கொடுக்குமாறு காவல்நிலையத்தில் சொல்வதால் பொதுமக்கள் அங்கு செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. காயார் கிராமத்தில் காவல் நிலையம் உருவாக்கப்பட்டும் பொதுமக்களுக்கு பயனில்லாத நிலையே உள்ளது.

போதிய போலீசார் இல்லாததால் இரவு ரோந்து பணி, ஏடிஎம் கண்காணிப்பு போன்றவற்றை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.  கடந்த 4 ஆண்டுக்கு முன்பு காயார் கிராமத்தில் அடுத்தடுத்த இரு வீடுகளில் 100 சவரன் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை துப்புதுலக்க முடியவில்லை. தற்போது பணியில் இருக்கும் போலீசாரும் 24 மணி நேரத்திற்கும் மேலாக கட்டாயமாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். போதிய போலீசார் இல்லாத நிலையில் இருக்கும் போலீசாரையும் நீதிமன்ற பணி, டிஎஸ்பி அலுவலக பணி, எஸ்பி அலுவலக பணி ஆகியவற்றையும் இந்த இரண்டு போலீசாரே மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, காயார் காவல் நிலையத்தில் ஒரு எஸ்ஐ, 2 எஸ்எஸ்ஐ, 10 போலீசார் நியமிக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Koyar police station , Coir Police Station Additional Police, Public Request
× RELATED தமிழ்நாட்டில் கோவை, மதுரை, தேனி...