மதுரை: மதுரை மாவட்டம், திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-17 முதல் 2020-21 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிட நலத்துறைக்கு ரூ.15,192 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் அரசுக்கே திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதை திரும்ப பெற்று ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்விக்கு பயன்படுத்துமாறு உத்தரவிட வேண்டும் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் பிளீடர் சாதிக்ராஜா ஆஜராகி, ‘‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்த விபரங்கள், அதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் வெப்சைட்டில் முழுமையாக உள்ளன. பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள் பெரும்பாலும் வனத்துறை மூலம் நிறைவேற்றப்படுவதால், அவர்களது வெப்சைட்டில் உள்ளது. ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த தனிப்பட்ட வெப்சைட் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் முடியும். நலத்திட்டங்களும், நல உதவிகளும் முறையாக செலவிடப்படுகிறது. திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படும் தொகை பெரும்பாலும் காலியிடங்களுக்கானதாக இருக்கும்’’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி வெப்சைட் உருவாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.