விகேபுரம்: ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவியில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுவும் விடுமுறை நாட்களில் அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் அருவிக்குச் செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக மோசமான நிலையில் உள்ளது.
பத்து வருடங்களாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மற்றும் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் என்ற அபாய நிலை உருவாகியுள்ளது. ஆகவே வனத்துறையினர் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.