ராய்ப்பூர்: ராஞ்சியில் நடந்த வன்முறை சம்பவத்தில் இருவர் பலியான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக 25 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பகுதியில் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் சர்ச்சை கருத்தை கண்டித்து போராட்டம் நடந்தது.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை குண்டு சம்பவங்கள் நடந்தன. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் ராஞ்சி வன்முறை சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் ஆளுநரிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த சம்பவத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவான அறிக்கை அளிக்குமாறு காவல்துறை இயக்குநர் நீரஜ் சின்ஹாவிடம் கேட்கப்பட்டுள்ளது.
ராஞ்சியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 25 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அதில் 29 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடையாளம் தெரியாத 12,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஆறு காவல் நிலையப் பகுதிகளில் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.