கோவை : நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் இருந்து சீரடி செல்லும் முதல் தனியார் ரயிலை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நாட்டிலேயே முதல்முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 14-ம் தேதி கோவையில் இருந்து முதல் பயணத்தை துவங்க உள்ளது. வாரம் ஒரு முறை இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.
பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் வசம் கொடுக்கப்படும் ரயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
குறிப்பாக, பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு வசதிகள், செல்போன் சார்ஜ், மற்றும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை, போர்வை, உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ரயில்வே துறை சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தமிழக எம்பிக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், வரும் 14ம் தேதி முதல் தனியார் ரயில் சேவை கோவையில் இருந்து துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.