×

வாணியம்பாடி அருகே பாலாற்றில் புதைந்திருந்த 3 பழங்கால சிலைகள் மீட்பு

ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சங்கராபுரத்தை ஒட்டிய பாலாறு பகுதியில், நேற்று முன்தினம் மாலை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, பாலாற்று மணலில் பெருமாள் மற்றும் அதனுடன் 2 அம்மன் சிலைகள் மணலில் புதைந்திருந்ததை கண்டு மணலை அகற்றி சிலைகளை வெளியே எடுத்தனர். தகவலறிந்து கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, கிராம உதவியாளர் பரந்தாமன் ஆகியோர் 3 சிலைகளையும் மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 3 சிலைகளும் ஆங்காங்கே சிதிலமடைந்து உள்ளது. இது பழங்கால சிலைகளாக இருக்கலாம்” என்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் அதே பகுதியில் உள்ள, ஸ்ரீலட்சுமி நாராயணன் கோயில் தூண்களில் 9ம் நூற்றாண்டு சோழர்கள் கால எழுத்துகளை கண்டறிந்ததைத் தொடர்ந்து, அந்த எழுத்துகளை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், அதே கிராமத்தில் உள்ள பாலாற்றில் பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தால் மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vaniyambadi , Vaniyambadi, Palaru, 3 ancient statues recovered
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...