×

ஆன்லைன் ரம்மி தொடர்பாக ஆய்வு செய்ய குழு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: முந்தைய ஆட்சியாளர்களால் கடந்தாண்டு பிப்.25ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி வழங்கிய தீர்ப்பில், இச்சட்டத்தை ரத்து செய்தது. மேலும், அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வ தரவுகளை விளக்க தவறியதாகவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.

தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வாங்கடே ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாரணையில் கூறியிருப்பதாவது:
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை கண்டறிவது, இந்த விளையாட்டுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராய்வது, இவற்றை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்வது, ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதற்கான கட்டணங்களை குறைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வது, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்துவது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சட்ட விதிமுறைகளை கண்டறிவது உள்ளிட்டவைகள் குறித்து 2 வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டும். மேலும், இக்குழுவிற்கு தேவையான ஆதரவுகளை காவல்துறை இயக்குனர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu , Online Rummy, Study Group, Government Publication, Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...