×

நிலம் வாங்கி கொடுப்பதாக நடிகர் சூரியிடம் ரூ.2.90 கோடி மோசடி மாஜி டிஜிபி ரமேஷ் குடவாலாவிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான நடிகர் விஷ்ணுவிடமும் சரமாரி கேள்வி

சென்னை: வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் சூரி. இவர் நிலம் வாங்க நடிகர் விஷ்ணுவின் தந்தையான முன்னாள் டிஜிபி ரமேஷ் குடலாலா மூலம் ₹2.90 கோடியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் வாங்கி கொடுத்த நிலம் சரியில்லாததால், அந்த நிலம் வேண்டாம் என சூரி கூறியுள்ளார். வேறு இடத்தில் நிலம் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் சொன்னபடி வாங்கித் தரவில்லை என கூறப்படுகிறது. எனவே, கொடுத்த பணத்தை சூரி கேட்டபோது, ₹1.30 கோடிக்கு மேல் பணத்தை கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள ₹1.40 கோடியை இருவரும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இதுபற்றி சூரி அடையாறு காவல் நிலையத்தில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் மீது புகார் அளித்தார். ஆனால் முன்னாள் டிஜிபி என்பதால் அவர் மீதான புகார் மீது விசாரணை நடத்தாமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்தனர். தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நடிகர் சூரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் அடையாறு காவல் நிலையத்தில் இருந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டு 6 மாதத்தில் வழக்கின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் நடிகர் சூரி அளித்த மோசடி புகார் மீது விசாரணை நடந்து வருகிறது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். அதைதொடர்ந்து ரமேஷ் குடவாலா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல அவரது மகன் நடிகர் விஷ்ணுவிடமும், தயாரிப்பாளர் அன்புவேல்ராஜூடமும் விசாரணை நடத்தினர்.  முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா உள்பட 3 பேரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி மீண்டும் புகார் அளித்த நடிகர் சூரியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.



Tags : DGP ,Ramesh Kudawala ,Suri , Former DGP Ramesh Kudawala probed for allegedly defrauding actor Suri of Rs 2.90 crore for buying land: Actor Vishnu, who appeared before the police commissioner's office
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...