மதுராந்தகம், ஜூன் 10: மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, தனியர் பள்ளி வாகனங்களை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் பேருந்துகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில், 2 தாலுகாக்களில் உள்ள 37 தனியார் பள்ளிகளில் சுமார் 140 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓரிரு தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில், மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி பேருந்துகளின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தனர். மதுராந்தகம் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று ஆய்வு பணி நடைபெற்றது. இதில், மதுராந்தகம் கோட்டாட்சியர் சரஸ்வதி, ஏஎஸ்பி கிரன்சுருதி, ஆர்டிஓ திருவள்ளுவன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது, பேருந்தின் இருக்கைகள், ஜன்னல்கள், ஜன்னல் கம்பிகள், பள்ளி மாணவர்கள் ஏறும் வகையில் படிக்கட்டுகள் இருக்கின்றனவா, முதலுதவிப் பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் ஆகியவற்றின் செயல்பாடுகள் சரியாக இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.