×

லாரி மீது தனியார் பேருந்து உரசியதால் 4 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி: மதுராந்தகம் அருகே சோகம்

சென்னை: மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது, தனியார் பேருந்து உரசியதில், படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் நகர் பகுதியில் தனியார் கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் தனியார், அரசு பேருந்துகள் மற்றும் தனித்தனி வாகனங்களில் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரி செல்வதற்காக தனியார் பேருந்தில் மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்து உள்ளே இடம் இல்லாமல் சில மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அந்த பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுநாகலூர் பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் உரசியபடி சென்றுள்ளது.

இதனால் பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த அச்சிறுப்பாக்கம் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு மாணவன் தனுஷ் (19), மோகல்வாடி கிராமத்தை சேர்ந்த பி.காம் முதல் ஆண்டு மாணவன் ரவிச்சந்திரன் (18), அதே கிராமத்தை சேர்ந்த பிபிஏ 2ம் ஆண்டு மாணவன் மோனிஸ் (19) மற்றும் சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பி.காம் (சிஏ) 2ம் ஆண்டு மாணவன் கமலேஷ் (19) ஆகிய 4 பேர் கன்டெய்னர் லாரி மீது மோதி சாலையில் விழுந்தனர்.

இதில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் 2 மாணவர்கள் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் மீட்கப்பட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்தனர். மேலும் படிக்கட்டில் பயணித்த 3 மாணவர்கள் லேசான காயமடைந்த நிலையில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து விபத்து நடந்த பகுதிக்கு வந்த உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். சாலையில் சென்றவர்களும் விபத்தைக் கண்டு கண்ணீர் விட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் சோகம் நிலவியது.

மேல்மருவத்தூர் போலீசார் வந்து, மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் வந்து உடனடியாக அதனை சீரமைத்து வாகனங்கள் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அவர்கள் படித்த தனியார் கல்லூரிக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இன்று கல்லூரியில் அஞ்சலி செலுத்த உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை தொழுப்பேடுவில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் பேருந்து, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரி மாணவர்கள் தனுஷ், கமலேஷ், மோனிஷ், ரவிச்சந்திரன் உயிரிழந்தனர், என்ற துயர செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். உயிரிழந்த 4 மாணவர்களின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post லாரி மீது தனியார் பேருந்து உரசியதால் 4 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி: மதுராந்தகம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Madurantakam ,Chennai ,Chennai — Trichy National Highway ,Maduranthakam ,Maduranthagam Nagar ,Madurantagam ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...