×

எல்கேஜி,யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடிகள் பராமரிக்கும்: தொடக்க கல்வித்துறை விளக்கம்

சென்னை: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துணையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளை அங்கன்வாடி பணியாளர்களே தொடர்ந்து கையாள்வது குறித்து தொடக்க கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடக்க கல்வி இயக்கம் 1 முதல் 8ம் வகுப்புகள் வரையுள்ள பள்ளிகளையும், பள்ளி கல்வி இயக்கத்தின் கீழ் 6முதல் பிளஸ் 2 வரை உள்ள வகுப்புகளையும் நிர்வகித்து  வருகின்றன. தொடக்க கல்வி இ யக்ககத்தின் கீழ் 22831 தொடக்கப் பள்ளிகள், 6587 அரசு நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் கடந்த 2022-2023ம் கல்வி ஆண்டில் 23 லட்சத்து 40 ஆயிரத்து 656 பேர் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில் 69 ஆயிரத்து 640 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சமூக நலத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் படிக்கின்ற குழந்தைகள் 5 வயது பூர்த்தி அடைந்த பிறகு தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு  திட்ட அரசாணையின் படி 52 ஆயிரத்து 933 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 2381 அங்கன்வாடி மையங்களில் பரிட்சார்த்த முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

மேற்படி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருந்தாலும், மழலையர் வகுப்பில் படிக்கும் குழந்தைகளை கையாளும் திறமை குறைந்தவர்களாகவும், புரிதல்  இல்லாதவர்களாகவும் இருந்தனர். அதனால் 2013-2014ம் ஆண்டுக்கு பிறகு மேலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் தொடக்க கல்வி இயக்ககத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால் தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டது.

மேலும் தொடக்கப் பள்ளிகளில் 4863 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டதுடன் 3800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாறின. கொரோனா காலத்தில்ஏற்பட்ட கற்றல் பாதிப்பு அதை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்தனர். குறிப்பாக 1 முதல் 5ம் வகுப்புகளில் 2 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அதனால் 4500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் தேவை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள காலிப்பணியிடங்களை சேர்த்தால் 9000 ஆசிரியர் பணியிடங்கள்  தேவை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட உயர்மட்ட அலுவலர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு பிறகு, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். அதனால் அங்கன்வாடி மையங்களில் ஏற்கெனவே இருந்த நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்  அங்கன்வாடி உதவியாளர்களை தற்காலிகமாக நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு இயக்குநர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

Tags : Anganwadis ,LGG ,UKG , LKG, UKG Class, Anganwadis, Primary Education,
× RELATED அங்கன்வாடி குழந்தைகள் விவரங்களை...