திருவெண்ணெய்நல்லூர்: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜி (52). பிரபல மலையாள நாளிதழின் நிருபரான இவர், கவிஞர் வைரமுத்துவின் நெருங்கிய நண்பர். ஷாஜியின் மனைவி சுமிதா (48). இருவரும் நேற்று குமுளியிலிருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். ஆபிரகாம் (26) என்பவர் காரை ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தென்பெண்ணை ஆற்று மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் கார் நொறுங்கியது. இதில் பத்திரிக்கையாளர் ஷாஜி மற்றும் ஓட்டுனர் ஆபிரகாம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமிதா பலத்த காயத்துடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.