சென்னை: தமிழக முதலமைச்சரின் உறவினர்கள் சிலர் சில நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருப்பது முறைகேடு என்றால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களின் வருமானம் பல ஆயிரம் மடங்கு உயர்ந்திருப்பதற்கு என்ன பெயர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு முரசொலி நாளேடு கேள்வி எழுப்பியிருக்கிறது. முதலமைச்சரின் உறவினர்கள் சில நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருப்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக கட்டுரை வெளியிட்டிருக்கும் முரசொலி நாளேடு, அண்ணாமலைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே முதலமைச்சரின் உறவினர்கள் ஒருசில நிறுவன பங்குதாரர்களாக இருப்பதே முறைகேடு என்றால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தொடர்புடைய நிறுவனங்கள் பல ஆயிரம் மடங்கு வருமானம் ஈட்டி இருப்பதற்கு என்ன பெயர் என்று கேட்கப்பட்டுள்ளது. குஷும் பாலி பிளாஸ்ட் என்ற நிறுவனம் குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது தொடங்கப்பட்டதை முரசொலி நாளேடு சுட்டிக்காட்டியிருக்கிறது. அமித்ஷா ஒன்றிய அமைச்சரான பிறகு கடந்த 2014ல் இருந்து 2019ம் ஆண்டுக்குள் அமித்ஷாவின் மகன் பங்குதாரராக இருந்த அந்த நிறுவனத்தின் வருமானம் 15 ஆயிரம் சதவீதம் உயர்ந்திருக்கிறது.
டெம்ப்பிள் எண்டர்பிரைசஸ், ஸ்ரீநாத் டிரேட் வேல்ட், காமாட்சியா லாஜிஸ்ட்ரிக்ஸ், எல்.எல்.பி., குசும் பைனான்ஸ், கி.நோட் டிஜிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பங்குதாரராக உள்ளார் என்றும் முரசொலி நாளேடு கூறியிருக்கிறது. அமித்ஷாவின் மகன் நிறுவனத்தின் வருமானம் பாஜக ஆட்சியில் உயர்ந்தது எந்தவகை முறைகேடு, ஊழல் என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும் என்று அந்த நாளேடு வலியுறுத்தியிருக்கிறது. அமித்ஷாவின் மகன் விவகாரங்களையும் மக்களுக்கு அண்ணாமலை அம்பலப்படுத்துவரா? என்று அந்த நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது.