சென்னை: பப்ஜி மதன் ஜாமின் கோரிய தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து, அவர் மீது உள்ள குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக அவர் ஜாமின் கோரிய மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்திருந்த இந்த மனு இன்று நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தன்னுடன் விளையாடியவர்களிடம் மட்டுமே உரையாடியதாகவும், 316 நாட்களாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என பப்ஜி மதன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆன்லைன் விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்களிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி கூறியுள்ளது. இதனால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யப் போவதாக நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து பப்ஜி மதன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.