×

பணகுடி அருகே விளையாடிய போது காருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாப பலி

பணகுடி: பணகுடி அருகே காரை திறந்து விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள், காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். நெல்லை மாவட்டம், பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பு பாலர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அருணா. இவர்களின் குழந்தைகளான நித்திஷ் (7), நிதிஷா (5) ஆகியோரும், இதே பகுதியைச் சேர்ந்த சுதன்- தபிஷா தம்பதியின் குழந்தையான கபிசந்த்தும் (4) நேற்று மதியம் நாகராஜின் அண்ணன் மணிகண்டனின் காரை திறந்து உள்ளே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். நெடுநேரம் விளையாடிய பிறகு வெளியேற நினைத்த குழந்தைகளால் கதவை திறக்கத் தெரியவில்லை.

இதனால் காருக்குள் மூச்சுத் திணறிய 3 குழந்தைகளும் காரிலேயே மயங்கி விழுந்தனர். நீண்டநேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது காருக்குள் 3 குழந்தைகளும் மயங்கிக் கிடந்ததை கண்டு, உடனடியாக கதவை திறந்து அவர்களை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், 3 குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Panakudi , 3 children suffocated to death inside car while playing near Panakudi
× RELATED சாலை விபத்தில் படுகாயம் தூய்மை...