திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராமாபுரம் பெரிய, சிறிய ஏரிகளில் மீன் பாசி குத்தகை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டம், செயற்பொறியாளர் சி.பொதுப்பணிதிலகம் உத்தரவின்படி, மீன்வளத்துறையிடம் இருந்து அடிப்படை ஆதார விலை நிர்ணயம் பெறப்பட்டு உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்திய நாராயணன் அறிவுறுத்தலின்படி ஏலம் விடப்பட்டது. ஏலத்தை திருவாலங்காடு பாசன பிரிவு உதவி பொறியாளர் பி.ஜி.கௌரிசங்கர் முன்னின்று நடத்தினார். ராமாபுரம் பெரிய ஏரியின் அடிப்படை ஏல தொகை 1 லட்சத்து 18 ஆயிரத்து 800 என நிர்ணயிக்கப்பட்டு அதிகபட்சமாக ₹35 லட்சத்து 57 ஆயிரத்துக்கு ஏலம்போனது. ராமாபுரம் சித்தேரியின் அடிப்படை ஏல தொகை ₹9600 என்று நிச்சயிக்கப்பட்டு அதிகபட்சமாக ₹3 லட்சத்து 65 ஆயிரத்துக்கு ஏலம் போனது. திருவள்ளூர் மாவட்டத்தில் இது வரை இவ்வளவு அதிக விலைக்கு மீன் பாசி குத்தகை ஏலம் விடப்பட்டதில்லை.