சென்னை: மதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: அயல் உறவுத்துறை துணைச் செயலாளர் அருண்குமார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தொடர்பு கொண்டு பேசினார். கடந்த ஏப்ரல் 2ம் நாள், அயல் உறவுத்துறை அமைச்சருக்கு, நீங்கள் ஒரு கடிதம் எழுதி இருந்தீர்கள். தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம், ஈராக் நாட்டின் கர்பலாவில் மேற்கொண்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், 7500 இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுள் 2000 பேர் தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களுடைய பணியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனம் நீட்டித்த போதிலும், ஈராக் நாடு விசா நீட்டிப்பு தரவில்லை. அவர்களுடைய கடவுச் சீட்டுகளில், புறப்பாடு மட்டும் என்ற முத்திரையைக் குத்தினர். இந்த முத்திரை இருந்தால், அதன்பிறகு, அவர்கள், துபாய், கத்தார் அல்லது வளைகுடாவில் வேறு நாடுகளுக்கு செல்ல முடியாது. எனவே, இதுகுறித்து ஈராக் அரசுடன் பேசி, பிரச்னையை தீர்க்குமாறு தாங்கள் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள். இதுகுறித்து, அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார். தொழிலாளர்களுடைய பிரச்னை பேசி தீர்க்கப்பட்டு விட்டது. எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தார்.