சென்னை: அண்ணாசாலையில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் ரூ.3.50 லட்சம் பணம் டெபாசிட் செய்ய வந்த மீன் வியாபாரியை தாக்கி பணத்தை பறித்து சென்ற 2 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி ஜானி ஜானிகான் தெருவை சேர்ந்தவர் அமீது(25). மீன் மொத்த வியாபாரி. இவர் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் ரூ.3.50 லட்சம் பணத்தை அண்ணாசாலையில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் டெபாசிட் இயந்திரத்தில் பணத்தை செலுத்த தனது பைக்கில் வந்தார். பிறகு ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை பணத்தை செலுத்த முயன்ற போது, அந்த இயந்திரம் வேலை செய்ய வில்ைல.
இதனால் அமீது ராயப்பேட்டையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு தனது பைக்கில் சென்றார். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை சந்திப்பு அருகே செல்லும் போது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர் அமீதை வழிமறித்து தாக்கி அவர் பையில் வைத்திருந்த ரூ.3.50 லட்சம் பணத்தை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அமீது சிறு காயங்களுடன் சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று தப்பி ஓடிய 2 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது.