சென்னை: விமான நிலையத்தில் உள்ளது போன்று பல்வேறு அம்சங்களுடன் ₹760 கோடி மதிப்பில், சென்னை எழும்பூர் ரயில்நிலையம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார்.சென்னை, எழும்பூர் ரயில்நிலையம் மிக முக்கியமான ரயில்நிலையங்களில் ஒன்று. இதன் வழியாக, 35 மெயின் லைன் ரயில்கள் மற்றும் 240 புறநகர் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்த ரயில்கள் மூலம் 24,129 பேர் பயணிக்கின்றனர். 2020-21ம் ஆண்டில் இந்த ஒரு ரயில் நிலையம் மூலம் மட்டும் ₹125 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில் ரயில்நிலையத்தை மறுமேம்பாடு செய்வதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக உத்தேச தொகையாக ₹760 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது புறநகர் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களுக்கான பல்வகை போக்குவரத்து மையமாக செயல்படும்.
இதன் ஒருபகுதியாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நகரின் முக்கிய சந்திபுகளில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சமீபத்தில் சென்று மறுசீரமைப்புக்கான திட்டங்களை ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:எழுப்பூர் ரயில் நிலையம், அதன் பாரம்பரியத்தை அப்படியே தக்கவைத்து அதன் வசதிகளை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மறுவடிவமைக்கப்படும். இந்த ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். அதாவது தனியான வருகை மற்றும் புறப்பாடு நடைபாதை, பிரகாசமான வெளிச்சம் மற்றும் எஸ்கலேட்டர்கள், லிப்ட் மற்றும் ஸ்கைவாக்குகள் மூலம் தளங்களுக்கு தொந்தரவு இல்லாத அணுகலை கொண்டிருக்கும். முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து நிலையங்கள் மறுவடிவமைக்கப்படும். மேலும் 9 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.